Monday, May 7, 2018

புதியகாலனிய உயர்கல்விக் கொள்கைக்கு சேவை செய்யும் “நீட்” தேர்வை எதிர்ப்போம்!!



புதியகாலனிய உயர்கல்விக் கொள்கைக்கு சேவை செய்யும் “நீட்” தேர்வை எதிர்ப்போம்!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

இந்துத்துவப் பாசிச பா.ஜ.க-வின் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்திருத்தம் 2016-இன் மூலம் இந்தியா முழுமைக்கும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (National Eligibility -cum-EntranceTest-NEET) நடத்தி முடித்துவிட்டது.

மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவது; நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக் கழகங்கள் நடத்தும் தரமற்ற, நம்பத்தகாத பல்வேறு நுழைவுத் தேர்வுகளை ஒழித்து ஒரே சீரான தேர்வை நடத்துவது; மருத்துவக் கல்விக்கான கட்டணத்தைக் குறைப்பது என்று கூறி மோடி கும்பல் நீட் தேர்வை நியாயப்படுத்துகிறது. ஆனால் உண்மை என்ன? தகுதிபெற்ற கிராமப்புற மாணவி அனிதாவை மருத்துவக் கல்வியிலிருந்து விரட்டி மரணக்குழியில் தள்ளிவிட்டது.

தமிழ் நாட்டைச் சேர்ந்த கிராமப்புற ஏழைமாணவி அனிதா +2 தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களை எடுத்து மருத்துவக் கல்விக்குத் தகுதி பெற்றவர், நீட் தேர்வில் தோல்வி அடைந்து தனது மருத்துவர் கனவு கலைந்து தற்கொலை செய்துகொண்டார். அவரைப் போலவே பல மாணவர்கள் +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் கூட ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்து மருத்துவப் படிப்பில் சேரமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தரம் என்ற பேரில் மோடி அரசும் உச்சநீதிமன்றமும் அரசியல் சட்டத்தில் வழங்கியுள்ள சமூகநீதியை மறுத்து ‘நீட்’ தேர்வை திணித்து மாணவி அனிதாவை கொலை செய்துள்ளன. எனவே, அனிதாவின் கொலைக்கு நியாயம் கேட்டும் நீட் தேர்வை அடியோடு நீக்க வேண்டும் என்று கோரியும் மாணவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் +2 மதிப்பெண் அடிப்படையிலான ஒற்றைச் சாளர முறையையே தொடர்ந்து பின்பற்ற தமிழ்நாடு சட்டமன்றம் ஏகமனதாக சட்டமியற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் மோடி அரசாங்கம் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப மறுத்து அவசர அவசரமாக நீட் தேர்வைத் திணித்தது.